அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

உங்கள் மீது ஏக இறைவனின்

சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்?



நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள்.
வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி.
இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழிறங்குகிறாள் சிந்து.
அது அந்தக்கால ஆப்கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம் போய் வெளியே வருவார்கள்.
பூமியே புதிராக தெரிந்தது. அவர்களுக்கு நதியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர் சுற்றிலும் இருள் பூசியது யார்? நடுங்கினர்.இந்தப் பயத்தாங்கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள்.
அவர்களின் மூளைக்குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தைக் குடைந்தனர்.
விளைவு...! கண்டுபிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான் உற்றுப் பார்த்தவன். (இந்த தெய்வம் என்ற பதம்தான் அய்ரோப்பியர்களால் டிவைன் (Divine) என வழங்கப்படுகிறது.
ஆரியர்களில் ஒரு பகுதிதான் அய்ரோப்பாவுக்கு நகர்ந்தது. இயற்கை தான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு ரிஷி என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான்.
நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்குநாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள்.
உண்டாயிற்று வேதம்.
உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.இந்த உலகமே தெய்வம் தான். நாம் வாழ சந்தோஷமாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும் - வகுத்தது வேதம். Civilisation never born, but, it is the heritage of humanity’ என பிற்பாடு அமெரிக்க அறிஞர் ப்ரைஸ் சொன்னது போல் தொட்டுத் தொடர்ந்தது நாகரிகம்.
முதலில் இயற்கையைப் பார்த்துப் பயந்த மனிதர்களுக்கு சிந்தனை செய்து உற்றுப் பார்த்த மனிதனான ரிஷி அறிவுரை சொன்னான்.
பயப்படாதே.. நீயும் நானும் நன்றாக வாழ வேண்டும். அதற்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவோம். நதிகளைப் பயன்படுத்துவோம். இயற்கை நமக்காகத் தான் வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது.
ஆரிய இனத்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும்...இம் மனிதர்களிடையே இப்படித்தான் வேத மதம் பிறந்தது.
இந்த நல்லெண்ணச்சிந்தனை வளர்ந்து மெருகேற்றியது தான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற. ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதற்கு என்ன செய்தார்கள்! பிரித்தார்கள். மூன்றாக பிரித்தார்கள். தங்களைத் தாங்களே நிருவாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்தவில்லை.
ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறி முறைகளைச் சொல்லிக்கொடுத்து... அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு. ஆள்பவன் க்ஷத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான்.
ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் க்ஷத்திரியர்கள். உழைக்க வேண்டும். பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள். பிராமணர்கள் பார்த்தார்கள். இவர்கள் இருவருமே வேதத்தை விட்டு விட்டுப் போய்விட்டார்களே....
அதிலுள்ள கருத்துகளை கட்டளைகளை கர்மாக்களை நாம்தானே சிரமேற்கொண்டு செயல் படுத்தவேண்டும். எனவே வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது. இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் நடந்ததாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.
ரிசா, குபா, க்ரமு என்கிற நதிகள் வேதத்தில் ஓடுகின்றன. இவை ஆப்கன் தேச நதிகள் என்பதால் வேதகாலம் பெரும்பாலும் ஆப்கன் பகுதியில் தான் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கின்றன.
வேதத்தில் மூழ்கியிருந்தோரின் முடிவுகள். வேதம் பிராமணர்கள் கைக்கு போனதும் அறமும் தர்மமும் கர்மாக்களும் செவ்வனே நடந்தேறி வந்ததால்.. வேத மதம் பிராமண மதம் ஆயிற்று.
ஆரிய மதம் வேதமாகி வேத மதம் பிராமண மதமாகி, காலவெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க, அப்போது இங்கே சுமார் 450 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்?
இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்?
ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்துசகதி அந்தஸ்தோடு கிடக்கிறது. புருஷன் பார்த்தான். ஒரே தாண்டு. இந்தப்பக்கம் வந்துவிட்டான்.
திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியது தான் என பயந்தாள்.கொஞ்சம் கை குடுங்கோ... வந்துடறேன் என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம் தான்.
இதே போலத் தான் அன்று... ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?
நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றையெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது. வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.
ஆப்கானிஸ்தானை விட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி.
வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கது தான். ஆரியர்கள் பெண்களைத் தான் விட்டு விட்டு வந்தார்கள். ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.
மனு? வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது. அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு.
அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப்பட்டதுதான் மனுதர்மம்.
பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை மனு பிளவாக்கியது.
கூடவே, இவர்களைத் தாண்டிசூத்திரர்கள் என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது மனு.
பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு - சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே. சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை... இப்படிப் போகிறது மனு.
வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் நன்றாகவே வேலை செய்தது.
ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த க்ஷத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.
அடே... குழந்தாய் இந்தா பால். இதைக் குடித்து மகிழ்வாய் வாழு என்ற வேதத்தை மனு திரித்து... இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்... இவன் குடிக்கக் கூடாது. இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்க வேண்டும் என பிளவு செய்தது.
ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றை பாருங்கள்.
பால்யே பிதிர்வஸே விஷ்டேதுபாணிக்ரஹா யௌவ் வனேபுத்ரானாம் பர்த்தரீ ப்ரேதுநபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்.
பெண்ணே... நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்... வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலையெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி. நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்.
இப்படி பெண்ணுரிமை பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது.
பெண்கள் அசுத்தமானவர்கள். உனக்கு விதிக்கப்பட்டுள்ள மந்த்ரோப தேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே... பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.
மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு பூம் பூம் மாடுகள் போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.
வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான். இதுபடி கேள். இல்லையேல் நீ பாபியாவாய்... என மந்த்ரங்களால் மிரட்டப்பட்டனர் மக்கள்.
பல நூறு வருடங்கள். ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது. வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன், க்ஷத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
இப்படிப்பட்ட ஒரு சாஸ்திர ஏகாதிபத்யசூழ்நிலையில் தான்... இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.கடவுள் பெயரை சொல்லியும்... கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே?
உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்?
வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன்படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள். கொடுமை தான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம். மனு வேண்டாம். கடவுள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்... என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாசமான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.
இன்றைக்கு அணு குண்டு வெடி சோதனைக்கேபுத்தர் சிரித்தார் என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புத்தரே வெடித்தார் என்றால் விளைவுகள் என்ன?
அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்.
வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டிருந்ததை எதிர்த்து புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட்டோம்.
குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள் எப்படி இருந்தன? விளைவுகள் என்ன சம்பவித்தன? என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
சகல சவுபாக்கியங்களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோதராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக்கியம் பளிச்சிட்டது. இனி பெண் சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போகலாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம்.- என மூளைக்குள் முடிவெடுத்தார். சட்டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளியே போய் விட்டார். வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன.
எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் துழாவிக் கொண்டிருந்தனர் மக்கள்.
ஏன் அக்னிப் புகை...? பிராமணர்கள் சொன்னார்கள், ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண்டும். வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகிறோம். பிராணிகளையும், தட்சணையையும் கொடுத்து நீங்கள் புண்ணியம் பெறுங்கள் என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய் சொன்னார்கள். (அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.
பசு என்றால் சமஸ்கிருதத்தில் நாலுகால் பிராணி என பொருள். பிற்காலங்களில் பசு என்றால் கறவை மாடு என வழங்குவது வழக்கமாகி விட்டது. தமாஷுக்காக இப்போது நாலு சக்கர பஸ்ஸை கூட பசு என கூறினாலும் கூறலாம்).
அந்த புகைக்கிடையே பிராமணர்கள் மந்திரங்களை சொல்லச் சொல்ல ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். காரணம், அன்று மக்கள் பேசியது பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் புரியவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரியவில்லை.
புத்தர் இதை பார்த்தார். மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தவேண்டுமானால், அவர்களின் மொழியான ப்ராக்ருதத்திலேயே கருத்துகளை பரப்பவேண்டும் என முடிவெடுத்தார். அப்போது தான் அசுவமேத யாகத்தின் கொடூரங்களையும், ஆபாசங்களையும் கண்கூடாக கண்டார் புத்தர்.
அதென்ன அசுவமேத யாகம்? ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு... அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ... அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம்.
ஓடிக்களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள்.
இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும்.
அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட ராஜா வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி... குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான். இதைக் கூற சவுஜன்ய (கூச்சம்) மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக ஸ்லோகமே அப்படித்தானே இருக்கிறது.
அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே... என போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி வழிபட வேண்டிய முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.
இரவு இந்த கடமை முடிந்ததும்... மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வ மேத யாகம்.
மக்களை போலவே, ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும்... ஏ... ராஜா, இந்த யாகத்தை நல்ல விதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொருளும் தட்சணை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும் என்றார்களாம்.
இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். மனித தர்மம் மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே...? ஏன் இப்படி...? என யாகம் நடந்த இடத்துக்கே போய் கேள்விகள் கேட்டார்.
பிராமணர்கள் பதில் சொன்னார்கள்: குதிரைக்கு மோட்சம் கிடைக்கும். லோகத்துக்கு க்ஷமம் கிடைக்கும் என்றார்கள்.
புத்தர் திரும்ப கேட்டார்.ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப் போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே. எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெறவேண்டாமா? அந்த அக்னி குண்டத்தில், யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டும் அல்லவா...?
ப்ராக்ருத மொழியில் மக்களிடம் இதே கேள்வியை புத்தர் பரப்ப... திடுக்கிட்டுப் போனார்கள் பிராமணர்கள். பிறகு...?
புத்தரும் & பிராமணர்களும்.
முரட்டுத்தனமாக ஓடித்திரியும் குதிரைகளுக்கே மோட்சம் கிடைக்கும்போது, மென்மையாய் வேதம் ஓதும் உங்களுக்கு அந்த அக்னி குண்ட மோட்சம் வேண்டாமா? என புத்தர் வேள்விச் சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியை போட யாகத்தை விட பெரு நெருப்பாய் கிளம்பியது இந்த ஒரு நெருப்பு.
காகம் கொத்தி ஆல மரம் சாயுமா?... ஆலமரம் போல் வேர்களையும், விழுதுகளையும் மண்ணுக்குள்ளும், மக்களுக்குள்ளும் ஊன்றி வைத்திருந்த வேத கட்டுப்பாடுகள், மநு கட்டளைகள் ஆகியவற்றின் முன் புத்தரின் கொள்கை முழக்கம் முதலில் தடுமாறினாலும் கொஞ்சம் கொஞ்சமாய் வலுப்பெற தொடங்கியது.
முதலில், உடனடி அழிவிலிருந்து பிராணிகளை காப்பாற்றுவது, பிறகு, மெல்ல மெல்ல கவ்வும் அழிவிலிருந்து மக்களை காப்பாற்றுவது என முடிவெடுத்த புத்தர்... தன் சிந்தனையோடு ஒத்துப்போகும் சில வாலிபர்களை தேர்ந்தெடுத்தார். புத்தருக்கு அப்போது முப்பது வயது இருக்கலாம். முறுக்கேறிய தேகம்... முன்னேறும் கண்கள். ஓயாத சிந்தனை தனக்கே உரிய குணங்களைப் பெற்றிருக்கும் அவர்களோடு சாலை சாலையாக நடந்தார்.
எங்கேனும் வேள்விச்சாலை அனல் அடித்தால் அங்கே விரைந்து சென்றது புத்தர் படை.யார் நலனுக்காக யாகம் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறதோ அவர்களை அணுகியது.. பாரப்பா... இப்படி உயிர்களைப் பலிகொடுத்து உனக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது?... சென்ற முறை பக்கத்தில் ஒருத்தன் பல யாகங்கள் நடத்தினான் பொருள் செலவு தான் மிச்சம். அவன் கண்ட பலன் ஒன்றுமில்லை.
நீ பலி கொடுக்கும் நாலு கால் பிராணியை நீயே தீனியிட்டு வளரு. அது இறந்து கொடுக்காத பலனை இருந்து கொடுக்கும். இந்த வைதீக கர்மாக்களை நம்பாதே. ஒருவனுக்கு இழப்பும், ஒருவனுக்கு பிழைப்பும் கொடுக்கும் மோசடி வித்தை... ப்ராகிருத மொழியில் பிளந்து கட்டியது புத்தர் குழாம். இதைக்கேட்ட யாகம் நடத்துபவர்கள்... உடனடியாக நிறுத்தவில்லை என்றாலும்... இனிமேல் யாகம் நடத்தமாட்டோம் என புத்தரிடம் உறுதி தந்தனர்.
புத்தர் நடந்தார். வீடு வீடாய்ச் சென்றார். இப்போது தேர்தல் வந்தால் கட்சிக்காரர்கள் வீட்டு எண்களைப் பார்த்துப் பார்த்துக் கும்பிடுவார்களே... அதே போல ஆனால் பதவியை எதிர்பாராமல் ஒவ்வொரு வீடாய்ப் புகுந்தார் புத்தர். யாகங்கள் நடத்தாதீர்கள். நெருப்புக்குள் உயிர்களைப் போட்டு கொல்லாதீர்கள். உங்கள் அறிவைப் பயன்படுத்தி வாழுங்கள். இது தான் புத்தோபதேசம்
இங்கே முக்கியமான ஒரு செய்தியை குறிப்பிட்டாக வேண்டும். புத்தருக்கு நெடுங்காலம் கழித்து தோன்றிய கிறிஸ்தவ மதத்தின் புனிதநூல் பைபிளில் மைக்கேல் கூறுவதாக கீழ்க்கண்ட வாசகங்கள் அமைந்துள்ளன. Don’t pour innocent matters into the fire. God wants your love only ஒன்றும் அறியாத அப்பாவி ஜீவன்களை நெருப்புக்குள் போட்டு எரிக்காதீர்கள். கடவுள் இதை விரும்புவதில்லை. அவர் உங்கள் அன்பை மட்டுமே விரும்புகிறார் என கிறிஸ்தவ புனித நூலில் சொல்லப்பட்ட கருத்தை... மிக மிக மிக முன்கூட்டியே வீடுவீடாகக் சென்று சேர்த்தவர் புத்தர்.
Anti Vedic வேத எதிர்ப்புக் கொள்கையை இன்னும் முழுவீச்சில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமானால் மக்கள் மனதில் பதியும் சில அடையாளங்களை பெற்றிருக்க வேண்டும் என ஜனரஞ்சகமான முடிவுக்கு வந்தார் புத்தர். என்ன செய்யலாம்?
மொட்டையடிக்கலாம் ஆடையைக் குறைக்கலாம். இவை வெளிப்புற அடையாளங்கள். தலையிலிருந்து ரோமங்களையும், உடலிலிருந்து உடையையும் களைந்தது போல், மனசிலிருந்து ஆசையைக் களைய வேண்டும். பெண்ணாசை, பொருளாசை துறந்து விட்டு வீட்டை திறந்து வெளியே வந்துவிட வேண்டும்.
தனி குழாமுக்கு இப்படி அழைப்பு விடுத்தார். குவிந்தனர். வீட்டை விட்டு வெளியே வந்தாகி விட்டது. இனி மக்களிடம் நம் கொள்கையைப் பரப்புவதுதான் முழு முதல் வேலை. வேறொருவர் வீட்டிலும் தங்கக் கூடாது. எங்கே போவது?...
உருவாகின புத்த விஹாரங்கள். சிறு சிறு எளிய குடில்கள். புத்த சன்யாசிகள் என (Buddhist monks) பிட்சுகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட கோயில் போன்ற ஸ்தலங்கள் தான் விஹாரங்கள் என அழைக்கப்பட்டன.
மக்கள் பேசும் மொழியான ப்ராக்ருதத்திலேயே புத்த பிட்சுகளின் பிரச்சாரங்களும் போதனைகளும் பரவத் தொடங்கின. விஹார்களின் எண்ணிக்கை சரசரவென அதிகரிக்க ஆரம்பித்தது. இன்றைய பிஹார் மாநிலத்துக்கு இப்பெயர் வர காரணமே. அங்கே புத்த விஹார்கள் எக்கச்சக்கமாய் இருந்தது தான் காரணம் என்ன ஒரு வரலாற்றுக் குறிப்பும் உள்ளது.
புத்தர் காலத்துக்குப் பிறகும் அவருடைய ஞான மார்க்கம் பரவி பெருகிய நிலையில்தான் பிராமணர்கள் தங்கள் கர்ம மார்க்கத்தை மறு பரிசீலனை செய்ய ஆரம்பித்தனர்.
உயிர்ப்பலிகளை குறைக்க முடிவெடுத்தனர். பிராமணர்களின் மிகப் பெரிய பலமே... யாரிடம் எது நல்லதாக இருக்கிறதோ அதை தங்களுக்கு ஸ்வீகாரம் செய்து கொள்வது தான்.
ஆங்கிலத்தில்Adoption என சொல்வோமே... புத்த இயக்கத்திடமிருந்து... ஜீவகாருண்யத்தை மட்டுமா ஸ்வீஹரித்தார்கள்.
இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே... இதுபோன்ற மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்து தான் பெற்றார்கள் பிராமணர்கள்.
மெல்ல மெல்ல புத்த இயக்கத்தினர் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்தனர் பிராமணர்களும் பின் தொடர்ந்தனர் பிறகு?...
5. வெறும் கற்சிலைகளை தெய்வங்களாக்கிய பிராமணர்கள்.
வழிபாடு என்றால்? பூ செய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள். பூணூல் வந்த கதை வேடிக்கையானது.
புத்தம் சரணம் கச்சாமி.. .தர்மம் சரணம் கச்சாமி... சங்கம் சரணம் கச்சாமி... என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக் காற்றில் கலக்க ஆரம்பித்த காலம்.
இங்கே தமிழ் பண்பாடு... நாகரிகத்தின் உச்சியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் இயற்கை, இறைமை, காதல், பக்தி என சகல விசேஷங்களையும் தொட்டு தமிழாட்சி நடத்திக் கொண்டிருந்தது.
பொதுவாகவே உலக அளவில் வழிபாட்டு முறையில் ஓர் ஒற்றுமை இருந்து வந்துள்ளது.
கல்லை வழிபடுதல்- Fetish worship, விலங்குகளை வழிபடுதல்- Totemism worship, மனித- உரு செய்து வழிபடல்- Shamnaism worship, விக்ரம், சிலை செய்து வழிபடுதல் - Idol worship நாகரிக பண்பாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகளும் வளர்ச்சி கண்டு வந்தன.
தமிழ் நாகரிகமோ சிற்பக்கலையில் தேர்ந்து விளங்கியது.
பழங்கால மன்னர்கள் தங்கள் ஆட்சியின் பெருமைகளை வரலாறு தாண்டி உரத்துச் சொல்லும் அளவுக்கு சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டி அங்கே தெய்வச் சிலைகளை எழுப்பி வழிபாடு நடத்திவந்தனர்.வழிபாடு என்றால்?
தமிழன் கல்லை சிலையாக்கும் நுண்மையான வன்மை கொண்டவன் என்றாலும்... அதே அளவுக்கு மென்மை தன்மையும் அவனிடத்தில் மேவிக் கிடந்தது.
பூக்களை பறித்து அவற்றால் வழிபாடு நடத்த ஆரம்பித்தான். அருகில் அணையாமல் நந்தா விளக்கு எரிந்து கொண்டே இருக்கும் தீப வெளிச்சத்தில் பூக்களால் நடத்தப்பட்டது தான் தமிழனின் முதல் வழிபாடு.
பூசெய் = பூவால் செய் இது இணைந்தது தான் பூசெய் பூசை என இப்போதைய வார்த்தையின் வடிவம் தோன்றியது. இதனை திராவிட மொழியியல் ஆராய்ச்சியாளர் எஸ்.கே. சாட்டர்ஜி தனது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டுகிறார்.
வழிபாடு மட்டுமல்ல பக்தியிலும் தமிழினம் தான் முன்னோடியாக இருந்திருக்கிறது. நீ உன் மனைவியிடம் காட்டும் அன்பை கடவுளிடம் காட்டு... என பக்திக்கு இலக்கணம் வகுத்தது பரிபாடல்.
நாயக நாயகி பாவம்என்ற பக்தி வடிவத்தை உலகுக்கு கொடுத்ததே தமிழ் இனம் தான். இவ்வாறு கடவுளை காதலியாகவும், காதலனாகவும் உருவகிக்கும், வர்ணிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது தமிழ்ப் பண்பாடு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான்... புத்தம் மற்றும் சமண கொள்கைகள் தமிழ்நாட்டில் பரவின. பரவின என்றால் சும்மா அல்ல... தெற்கே திருநெல்வேலி வரை சமணம் பரவிவிட்டது. நாகப்பட்டினம் வரை புத்தம் புகுந்து விட்டது.
வடஇந்தியாவில் புத்திஸத்தால் எதிர்க்கப்பட்ட வேத பிராமணர்கள் நகர்ந்து நகர்ந்து தென்னிந்தியாவைத் தொடுகின்றனர். அவர்களில் ஒருவர் தான் மகேந்திர பல்லவ ராஜா என்றும் கருத இடமுள்ளது.
புத்தர் இனத்தவர்கள் தமிழினத்தவரோடு சம்மந்திஉறவு முறை வரை நெருங்கி விட்ட நிலையில்... பல்லவ ராஜாக்கள் வேதத்தை வேத நெறி முறைகளை இங்கே விதைத்து வைத்தனர்.

புத்த போதனைகளால் எதிர்க்கப்பட்ட வேத போதனைகள் இங்கே பிராமணர்களால் மறுபடியும் தலை தூக்கின.
பிராமணர்கள் இங்கே வந்த போது அவர்கள் அணிந்திருந்த நூல்... அதாவது பூண்டிருந்த நூல்.. அதாவது பூணூல் (இப்போது பெயர்க் காரணம் புரிகிறதா)... பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் இங்கிருந்தவர்கள்.
என்ன இது? என கேட்க... அதற்கு பிராமணர்கள் பதில் சொன்னார்கள். சமூகத்தில் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதற்காக அணிவிக்கப் பட்டிருக்கும் அந்தஸ்து.....
ஆனால்... உண்மையில் இந்த பூணூல் வந்த கதை வேடிக்கையானது. வேத கர்மாக்களை நிறைவேற்றுவதற்கான சடங்குகளியல் ஈடுபட்டிருக்கும் போது.. வஸ்திரத்தை தோள்பட்டை வழியாக மார்புக்கு குறுக்காக அணியவேண்டும் என்பது வேதம் வகுத்த விதி.
அதேபோல் அணிந்து பார்த்தார்கள். கைகளை உயர்த்தி வேள்விச் செயல்களில் ஈடுபடும் போது அடிக்கடி அமர்ந்து எழுகின்ற போதும்.. வஸ்திரம் அவிழ்ந்து நிலை மாறிவிடுவதால்.. இது நிலையாகவே இருக்க என்ன வழி என்று பார்த்தார்கள்.
இதே போல மெல்லியதாய் அணிந்தால் பணி செய்யும் போது உபத்திரவம் செய்யாமல் இருக்குமே என யோசித்தனர். வஸ்திரம் நூலானது அதுவே பூணூலானது.
இதை அந்தஸ்துஎன வழங்கிக் கொண்ட பிராமணர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில்... புத்த, சமண கொள்கைகளை பின்பற்றுவதில் கஷ்டங்கள் இருந்தன.
சமண கொள்கைப்படி... உயிர்களை அதாவது எறும்பைக் கூட கொல்லக்கூடாது. நடக்கும் போது கூட பூமிக்கு நோகக்கூடாது!
மேலும் இரு கொள்கைகளுமே கடவுளை முக்கியப்படுத்தவில்லை என்பதால்.. கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்தன. இந்த மகா கொள்கைகள் இந்த மாற்றங்கள் நடந்த பிறகு...தமிழ்நாட்டில் வேதம் வழிந்தோடியது கிடைத்தது.
இங்கேயுள்ள மிகச் சிறந்த சிலைகளை பார்த்த பிராமணர்கள்.. இவை வெறும் கல்லாகவே இருக்கின்றன. நான் என் மந்த்ரத்தன்மை மூலம் இவைகளை தெய்வமாக்குகிறேன் என்றனர்.
பூசெய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள். பூ, நந்தா விளக்கு என இருந்த தமிழர் வழிபாட்டில் மட்டுமா?... கலாச்சாரத்திலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள் என்னென்ன?

0 கருத்துகள்:

Name
Email Address:


Form provided by Freedback.
Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites